search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் உதயகுமார்"

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மழையால் மீட்பு பணிகள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். #GajaCyclone #RBUdhayakumar
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.  இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்த பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-

    புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைக்கு 465 முகாம்கள், 535 மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் உள்ளன. கஜா புயலால் 2,17,935 மரங்கள் சாய்ந்துள்ளன, 91,960 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் மழை பெய்து வருகிறது. மழையால் மீட்பு பணிகள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். துண்டிக்கப்பட்ட 58 லட்சம் மின் இணைப்புகளில், 38 லட்சம் இணைப்புகள் சீரானது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    புதுக்கோட்டை மாவட்டத்தில்  நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், கிராம பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #GajaCyclone #RBUdhayakumar
    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் கேட்டுக்கொண்டார். #CycloneGaja #ReliefOperation #RBUdhayakumar
    சென்னை:

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் மீட்பு நடவடிக்கை திருப்தி இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

    இந்நிலையில் அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் உதயகுமார், தந்தி டிவிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப அரசு செயல்பட்டு வருகிறது. புயல் பாதிப்பால் உயிரிழப்புகளை தடுக்க, மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் அரசு கொண்டு வந்தது.

    பேரிடர் நேரத்தில் விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்; மீட்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுவதால் அதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சோர்வு ஏற்படும். எனவே, மீட்பு நடவடிக்கை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.



    குக்கிராமங்களிலும் கூட மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; 100% முழுமையாக நிறைவேற்ற, அரசுக்கு அவகாசம் தேவை. விழுந்த மின்கம்பங்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைப்பதே அரசின் முதல் பணி ஆகும்.

    சிலர் திட்டமிட்டு அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள்; இது நிவாரண பணியில் தொய்வை ஏற்படுத்தும். அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பதாக கூறப்படுவது தவறு; சாமானிய மக்களை போராட சிலர் துண்டிவிடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #CycloneGaja #ReliefOperation #RBUdhayakumar
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் இரவு - பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலுக்கு நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடலோர கிராமங்களில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    முதற்கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் பிரதான சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மூலம் அகற்றப்பட்டுள்ளன. இதற்காக 151 நவீன மரம் அறுக்கும் எந்திரங்கள், 92 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 28 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளுக்கு 2 ஆயிரம் பணியாளர்கள் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.

    புயலில் சிக்கி சாய்ந்துள்ள மரங்களை அகற்றவும், சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றிடவும் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர கிராமங்களில் வீடுகள், மரங்கள், பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களின் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    புயலால் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜெனரேட்டர்கள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மின் இணைப்பு வழங்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.
    வானிலை மையத்தின் சரியான கணிப்பால் புயலில் இருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது என்று அமைச்சர் உதயகுமார் பேட்டியில் கூறியுள்ளார். #TNMinister #Udhayakumar #Gajastorm

    சென்னை:

    கரையை கடந்த கஜா புயலால் நிறைய அனுபவங்கள் தங்களுக்கு கிடைத்ததாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கூறினார்.

    இதுபற்றி அவர் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை துறையை நாங்கள் முன் கூட்டியே உஷார்படுத்தி இருந்தோம்.

    இந்த நிலையில் கஜா புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தகவல்களை வழங்கிக் கொண்டே இருந்தது.

    புயல் வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அது காற்றழுத்த தாழ்வு நிலையாக இருக்கும்போதே நாங்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினோம்.

    மரங்கள் சாய்ந்தால் அதை அகற்றுவதற்கான எந்திரங்கள், மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி. எந்திரங்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், தகர கொட்டகையில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள ‘கான்கிரீட்’ கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நல கூடங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்குமாறு முன் கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்.

    கடலோர மாவட்டங்களில் இந்த பணிகளை மேற்பார்வையிட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் வருவதற்கு முன்பே அனுப்பி வைத்தார். அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் முன்கூட்டியே சென்று தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் கஜா புயலின் நகர்வை சிறப்பாக கணித்து எங்களுக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கியது. இந்த தகவல் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.


    இந்த தகவல்கள் மூலம் பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்க முடிந்தது. அதிகளவு உயிரிழப்பு ஏற்படாமல் மக்களை காப்பாற்றியது அரசின் சாதனையாகும்.

    இப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் புயலால் ஏற்பட்டதா? அல்லது சுவர் இடிந்து மின்சாரம் தாக்கிய காரணங்களால் ஏற்பட்டதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம்.

    கடலில் புயல் மெதுவாக நகர்ந்து வந்த காரணத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து மக்களையும் நாம் வெளியேற்றி விட்டோம். புயலால் சேதம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்ததால் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் ரத்து செய்தோம்.

    மின்கம்பங்கள் சாய்ந்தால் உடனே அதை சரிசெய்வதற்கு 15 ஆயிரம் மின் கம்பங்களை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

    கடந்த காலங்களில் புயலால் ஏற்பட்ட பாடங்களை முன்நிறுத்தி இந்த முறை அதிகளவு முன்எச்சரிக்கை எடுத்தோம். புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்ததால் போதிய கால இடைவெளியுடன் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிந்தது.

    புயல் கடந்த உடனேயே இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கையிலும் இப்போது முழு வீச்சுடன் இறங்கி உள்ளோம். நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் விரைவில் வீடு திரும்புவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

    சேத விவரங்களை தனித் தனியாக கணக்கெடுத்து வருகிறோம். இடிந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் சாய்ந்து முறிந்த தென்னை மரங்கள், மாமரம், பலா, முந்திரி, புளிய மரங்கள், வாழை மற்றும் சேதமான நெற்பயிர்களையும் கணக்கெடுத்து வருகிறோம். பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும். மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடக்கிறது.

    இனி எத்தனை புயல் வந்தாலும் அதனை எளிதாக எதிர்கொண்டு விடுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

    இவ்வாறு உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #Gajastorm

    கஜா புயல் முன்னேற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். #gajacyclone #rain #ministerudayakumar #edappadipalanisamy
    சென்னை:

    வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகை கடற்கரையில் இருந்து 138 கி.மீ. தொலைவில் உள்ளது. கஜா புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்.  

    சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மணிக்கு 16.8 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருந்த நிலையில் அதன் வேகம் 10 கி.மீட்டராக குறைந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் முனேற்பாடுகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் உதயகுமாரிடம்  முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். கஜா புயல் முன்னேற்பாடுகளை குறித்து முதல்-அமைச்சரிடம்  வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விளக்கினார். 

    ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முதல்-அமைச்சர் அலுவலகத்திடம் வருவாய்துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர். #gajacyclone #rain #ministerudayakumar #edappadipalanisamy
    சென்னை எழிலகத்தில் புயல் எச்சரிக்கை தகவல் மையத்தை இன்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். #MinisterUdhayakumar #CycloneGaja
    சென்னை:

    சென்னையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் நாகை அருகே இன்றிரவு கடக்க உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கியம் என்பதால் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு உரிய காலத்தில் எச்சரிக்கை தகவல்களை தெரிவிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்புகள், கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் எல்காட் நிறுவனம் மூலமாக ரூ.50 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை இன்று எழிலகத்தில் தொடங்கி வைத்தேன்.



    பேரிடர் காலங்களில், ஆபத்து நெருங்குவதற்கு முன்பாகவே, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசித்து வரும் ஆண்கள், பெண்கள், முதியோர், மாற்று திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உரிய எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறச் செய்து உயிரிழப்புகளை பெருமளவில் குறைப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய கடல்சார் தகவல் மையங்களிலிருந்து பெறப்படும் எச்சரிக்கை தகவல்களை ஒலி அலைகள் மூலமாகவும் முன்பதிவு ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும், நேரடி ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்றடையும் வகையில் இது செயல்படும். மேலும் இவ்வமைப்பின் சிறப்பு அம்சமாக பேரிடரால் பாதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும், பிரத்யேக அவசர தகவலை மென்பொருள் மூலம் தேர்வு செய்து அனுப்ப இயலும்.

    புயல் சம்பந்தமாக யாரேனும் வீண் வதந்தி பரப்பினால் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

    புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 5067 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdhayakumar #CycloneGaja
    சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone #Udhayakumar
    சென்னை:

    சென்னையில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘கஜா’ புயல் நெருங்கி வருவதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கஜா புயல் 3 முறை திசை மாறி உள்ளது. தற்போதும் அதன் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    கடலூர் முதல் பாம்பன் வரை புயல் சேதம் அதிகம் ஏற்படும் என்பதால் சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தயார் நிலையில் முன் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகையில் 3, சிதம்பரத்தில் 2, சென்னை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 1 வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கஜா புயல் தாக்குதலை சமாளிக்க கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.

    புயலால் 2559 இடங்கள் பாதிக்கப்பட கூடும் என கண்டறியப்பட்டு உள்ளதால் அங்கு மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி., எந்திரங்கள், மீட்பு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்பத்திரிகளில் உள்ள ஜெனரேட்டர்களை மேல்தளத்தில் வைக்கும் படியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் முழுமையாக நிரப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

    ஆக்சிஸன் சிலிண்டர், அத்தியாவசிய மருந்து பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்தால் அவற்றை சரி செய்ய தேவையான ஊழியர்களும் 1125 நீச்சல் வீரர்களும், 657 பாம்பு பிடிப்பவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    புயலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி கலெக்டர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள். அரசு ஊழியர்கள் விடுமுறை இன்றி பேரிடர் சமயத்தில் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #TNMinister #Udhayakumar
    வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரில் ரூ. 7 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 32 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இன்று தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடலோர மாவட்டங்களில் கூடுதலாக பாதுகாப்புகளை ஏற்படுத்த அனைத்து கடலோர மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டு உள்ளது.

    பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

    4,399 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேவைப்படும் பட்சத்தில் மத்திய பேரிடர் மீட்பு குழு பயன்படுத்தப்படும். 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காற்றோடு மழை இருக்கும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. எனவே மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்திகளை அவ்வப்போது கொண்டு சேர்ப்போம். ரெட் அலர்ட் என்பது அரசு நிர்வாகத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அச்சப்பட தேவையில்லை.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கடலோர மாவட்டங்களிலும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
    இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அதிக மழையினால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 9500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பருவ மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், செல்லக்கூடாத வழியில் சென்று தகுதி இழந்து நிற்கிறார்கள். அவர்களிடம் தேர்தலை சந்திப்பது மற்றும் மேல் முறையீடு செய்வது என்பதில் குழப்பம் உள்ளது. அவர்கள் முதலில் மேல்முறையீடு என்று அறிவித்தார்கள். பின்னர் தேர்தலை சந்திக்கிறோம் என்று அறிவித்து உள்ளனர். நாளை என்ன அறிவிப்பார்கள் என்று தெரியாது.


    தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து, தேர்தல் பணியாற்ற வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்கள். அதனை செயல்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம்.

    இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.

    அது அவர்களின் தொண்டர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இதுபோன்று சொல்லி வருகிறார்கள். இந்த அரசு 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, அடுத்து வரும் தேர்தலிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முன்நிறுத்தி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
    ‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கி எங்கள் மனதை குளிரச்செய்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #sarkar #ministerrbudayakumar #vijay

    மதுரை:

    நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.

    இந்த திரைப்படத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்தும், அ.தி.மு.க. அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்தும் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

    இதையொட்டி படக்குழுவினர் சர்ச்சை காட்சிகளை நீக்கி இன்று மதியம் திரையிடப்படும். சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் இடம் பெறாது என்று அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் இதய தெய்வமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் அம்மாவின் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் தீபாவளிக்கு திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தோம். அந்த மன உளைச்சல் இன்றைக்கு தீர்ந்திருக்கிறது.

    ‘சர்கார்’ திரைப்படத்தில் நடித்த நடிகரின் ரசிகர்மன்ற நிர்வாகிகள் அனைவரது வீடுகளிலும் கூட அம்மாவின் விலையில்லா திட்டம் சென்றடைந்து உள்ளது. அவர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள்.


    ஜாதி, இனம், மொழி, மத வேறுபாடின்றி கட்சி மாறுபாடின்றி அனைவரும் பயன்பெற்ற இந்த திட்டங்களை இனி யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. விமர்சிக்கக்கூடாது.

    ‘சர்கார்’ படக்குழுவினர் அந்த சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு இன்று மதியம் முதல் ‘சர்கார்’ திரைப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பால் எங்கள் மனம் குளிர்ந்து விட்டது.

    எனவே படக்குழுவினருக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    1 1/2 கோடி தொண்டர்களின் தெய்வமாக போற்றப் படுகின்ற அம்மாவின் தியாகத்தை, உழைப்பை கொச்சைப்படுத்துகின்ற நோக்கில் இது போன்ற காட்சிகளை இனி எந்த திரைப்படத்திலும் எடுக்க வேண்டாம்.

    இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் சினிமா துறையினர் கவனமாக செயல்பட வேண்டும்.

    ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 1 கோடியே 80 லட்சம் குடும்பதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கியவர் அம்மா. விலையில்லா திட்டங்கள் சமூக பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டதாகும்.

    இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஏராளம். இந்த திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாகும். இதனை இலவசம் என்ற பெயரில் சினிமாவில் கொச்சைப்படுத்தி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    அந்த வகையில் தான் ‘சர்கார்’ படக்குழுவுக்கு எங்கள் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தோம். இப்போது படக்குழுவினரின் அறிவிப்பு, அவர்கள் வழங்கியுள்ள உத்தரவாதம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எங்கள் உள்ளத்தை குளிரச் செய்து அறிவிப்பை தந்த படக்குழுவுக்கு மீண்டும் ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #sarkar #ministerrbudayakumar #vijay

    சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பதிலடி கொடுப்போம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Udhayakumar #Sarkar
    பேரையூர்:

    திருமங்கலம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வியாபார நோக்கத்திற்காக இன்று அம்மாவின் திட்டங்களையும் உழைப்பையும் கொச்சைப்படுத்தும் விதமாக சர்கார் படத்தில் சில காட்சிகள் வந்துள்ளது.

    இது ஒட்டுமொத்த உலக தமிழினத்தின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பது நமக்கெல்லாம் வேதனையாக உள்ளது.

    வியாபார நோக்கத்திற்காகவும் லாப நோக்கத்திற்காகவும் போட்ட முதலீட்டை எடுப்பதற்காக, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    வியாபார, அரசியல் நோக்கத்தோடு அந்த காட்சியை வடிவமைத்தார்கள் என்று சொன்னால் அதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

    இதனை உடனடியாக அவர்களே நீக்க வேண்டும். அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் அதனை முதலில் கண்டிப்போம், எச்சரிப்போம்.

    தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பேரவை தொண்டர்கள் உயிரை கொடுத்தாவது அவரது புகழை காப்போம்.


    அம்மாவின் திட்டங்களைப் பற்றி விவாதிக்க தயாராக உள்ளோம். ஐக்கிய நாடு சபையில் பாராட்டுப்பெற்ற திட்டங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவது என்பது அம்மா புகழை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே கொச்சைப்படுத்துவதாகும்.

    இதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது. அந்தக் காட்சி நீக்கப்பட வேண்டும்.

    இல்லையென்றால் ஜெயலலிதா பேரவை சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #Sarkar
    தனது சுய லாபத்துக்காக 18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார் என்று அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran #ADMK #Udhayakumar
    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த 18 பேரும் தங்கள் பதவியை தகுதி இழப்பு செய்த பின்னர் படாதபாடு பட்டுவிட்டார்கள்.

    அம்மாவின் அரசை காப்பாற்றுவதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை குற்றாலத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர்.

    பதவி ஆசையை காட்டி பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அம்மாவின் அரசை காப்பாற்ற குற்றாலத்தில் அடைத்து வைத்தாலும், துன்பத்தில் அடைத்தாலும் வெளியே வருவார்கள்.

    முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று நாங்கள் தெளிவாக கூறி வருகிறோம். எனவே தனது உயிரை தந்து அம்மா இந்த ஆட்சியை ஏற்படுத்தினார்.

    அது போல உயிரை கொடுத்தாவது இந்த ஆட்சிக்கு துணை நிற்க வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த தொகுதிகளில் மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தான் மக்களை மறந்து விட்டார்கள்.

    தினகரன் தனது சொந்த சுய லாபத்துக்காக இதுவரை அரசியலில் சீரழிவு கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார். தான் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அம்மாவின் அலங்கோலமான வீடியோவை வெளியிட்டார். அது போலத்தான் ஒருவரை சந்தித்து பேசுவதை கொச்சைப்படுத்தினார்.

    இன்று ஆடியோ சி.டி. வெளியிட்டு அமைச்சருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அ.தி.மு.க. அரசை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

    இவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே திருப்பரங்குன்றத்தில் நாளை (24-ந் தேதி) 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #Udhayakumar
    ×